மலேசியா விலிருந்து நாடு கடத்தப்பட்ட முக்கிய குற்றவாளி
பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் துப்பாக்கிதாரியாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் “மாட்டியா” என அழைக்கப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் தங்கியிருந்த அவர், அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதையடுத்து, நேற்று (25) நள்ளிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோதே குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் ஆரம்பக்கட்ட வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
42 வயதுடைய சந்தேகநபர் கொட்டுகொட, யாகொடமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தல் (Interpol Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மீது, 2022 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ‘பஸ்பொட்டா’ என அழைக்கப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் மற்றும் அவருடன் இருந்த மற்றொருவரை சுட்டுக் கொலை செய்ததுடன், அங்கு இருந்த மேலும் பலருக்கு துப்பாக்கிச் சூட்டில் காயம் ஏற்படுத்தியதாக பிரதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவும் முன்னெடுத்து வருகின்றன.

